மகரம்

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
இந்த மன்மத ஆண்டில் காலத்தை வீணாக்காமல் கடினமாக உழைப்பீர்கள். பெருந்தன்மையோடு தியாகம் செய்வீர்கள். எந்தப் பிரச்னைக்கும் சரியான முடிவெடுப்பீர்கள். உங்களின் அறிவார்த்தமான பேச்சால் சமுதாயத்தில் பாராட்டப்படுவீர்கள். சுதந்திர ஆர்வத்துடன் திகழ்வீர்கள். செய்தொழிலில் ஊக்கத்துடன் பணியாற்றுவீர்கள். அரசு வகையில் சில சலுகைகள் கிடைக்கும். அரசு மரியாதை, கௌரவத்தை நீங்கள் எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். சகோதர சகோதரர்களிடம் அன்போடு பழகுவீர்கள். இல்லத்திற்கு தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். சிலருக்கு வெளியூர் சென்று தொழில் செய்யும்படியான மாற்றங்களும் உண்டாகும். மேலும் மற்றவர்களை நம்பி செய்யும் காரியங்களில் சில ஏமாற்றங்களையும் சந்திக்க நேரிடும். வழக்கு விவகாரங்களிலிருந்து தள்ளி இருக்கவும். பெரிய பகை என்று எதுவும் ஏற்படாது. தவறான எண்ணங்கள் மனதில் ஏற்படுவதைத் தவிர்க்க, பெரியோர்களைத் தரிசிப்பது நன்மை பயக்கும். குழந்தைகளை சரியான பாதையில் இட்டுச் செல்வீர்கள். சில புதிய தொழில் நூட்பங்களைக் கற்றுக் கொள்வீர்கள். பங்கு வர்த்தகம் போன்ற துறைகளின்மூலம் ஓரளவுக்கு வருமானம் கிட்டும். மனோபலம், சரீர பலம் இரண்டும் சீராக இருக்கும். போட்டி, பந்தயங்களில் ஈடுபட்டாலும் பெரிய சாதனைகளை எதிர்பார்க்க முடியாது. அதோடு எவரிடமிருந்தும் அதிகமாக எதையும் எதிர்பார்க்க முடியாது போகும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்களுக்கு இந்த ஆண்டு திருப்புமுனைகள் ஏற்படும். உங்கள் வேலைகளை விருப்பு வெறுப்பின்றி செய்வீர்கள். மேலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் அனைத்து இடையூறுகளையும் தாண்டி வந்துவிடுவீர்கள். அலுவலக ரீதியான பயணங்களால் நன்மைகள் உண்டாகும். மேலும் விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் பெருமை உயரும். வியாபாரிகள் இந்த ஆண்டு லாபத்தையும் நஷ்டத்தையும் மாறிமாறி பார்ப்பார்கள். அடுத்தவர்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் கூட்டு சேர்வது, கடன் கொடுப்பது ஆகியவற்றைத் தவிர்க்கவும். புதிய முயற்சிகள் எதையும் இந்த ஆண்டு தொடங்க வேண்டாம். கணக்கு வழக்குகளைச் சரியாக வைத்திருந்து அரசிடம் சமர்ப்பிக்கவும். விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். இடுபொருள்களைச் சகாய விலைக்கு வாங்குவீர்கள். நீராதாரங்களையும் பெருக்கிக் கொள்வீர்கள். எதிரிகளின் தொல்லைகள் இராது. புதிய குத்தகைகளை நாடிப் பெறுவீர்கள். நிம்மதியாக உங்கள் வேலைகளைச் செய்வீர்கள். கால்நடைகளையும் இந்த ஆண்டு வாங்குவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் ஆதரவு சுமாராகவே கிடைக்கும். இதனால் கட்சி மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும். மற்றபடி மக்களின் உண்மையான தொண்டுகளில் மட்டுமே கவனம் செலுத்துவீர்கள். தொண்டர்களிடம் அனாவசிய நெருக்கமும் வேண்டாம். உங்கள் கொள்கையில் உறுதியான நிலைபாட்டுடன் இருப்பீர்கள். கலைத்துறையினருக்கு மனச்சோர்வு நீங்கி எதையும் சாதிக்கும் அளவுக்குத் திறமைகள் பளிச்சிடும். தன்னம்பிக்கையுடன் திகழ்வீர்கள். புதிய ஒப்பந்தங்களும்
கைகூடும். சக கலைஞர்களால் உங்கள் நெடுநாளைய கனவு ஒன்று நிறைவேறும். பரிசுகளும் பாராட்டுகளும் கிடைக்கும். பொருளாதாரம் சிறப்பாகத் தொடங்கும் ஆண்டாக இது அமைகிறது. பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராக இருக்கும். குடும்பத்தில் உங்கள் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காமல் நடந்துகொண்டு அமைதி காப்பீர்கள். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குடும்ப வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள சுய தொழில்களில் ஈடுபடுவீர்கள். மாணவமணிகள் வம்புகளிலும் வீண்பேச்சுகளிலும் கலந்து கொள்ள வேண்டாம். பழைய தவறுகளைத் திருத்திக் கொண்டு புத்துணர்ச்சியுடன் பாடங்களைப் படியுங்கள். தாழ்வு மனப்பான்மையை விட்டொழிங்கள். தேக ஆரோக்கியமும் மனவளமும் மேம்பட யோகா, பிராணாயாமம் போன்றவைகளைச் செய்யுங்கள்.
பரிகாரம்: ஐயப்பனை வழிபட்டு வரவும். 


புத்தாண்டு பலன்கள் சகல ராசிக்கும் இங்கே கிளிக் பண்ணுங்க 

Post a Comment

 
Top