செம்மரகடத்தலில் ஈடுபட்ட ஆந்திராவைச் சேர்ந்த மஸ்தான் வலியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த தெலுங்கு நடிகை நீத்து அகர்வால் இன்று கைது செய்யப்பட்டார்.

செம்மரகடத்தலில் ஈடுபட்டதாக ஆந்திராவைச் சேர்ந்த மஸ்தான் வலி அவரது சகோதரர் பாபாவலி ஆகியோரை சமீபத்தில் போலீசார் கைது செய்தனர். மஸ்தான் வலியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் செம்மர கடத்தல் கும்பலுடன் நடிகை நீது அகர்வாலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்தது.

செம்மர கடத்தல் தொடர்பாக இவர்கள் 3 பேர் மீதும் கர்னூல் மாவட்டம் ருத்ராவரம் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள்.  செம்மரக்கடத்தலில் கிடைத்த பணத்தை மஸ்தான் வலி நீது அகர்வாலின் வங்கி கணக்கில் போட்டு வைத்துள்ளார் என்றும், நீது அகர்வாலின் வங்கி கணக்கில் இருந்து பல கடத்தல்காரர்களுக்கு பணம் அனுப்பப்பட்டு இருப்பதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. குறிப்பாக கடத்தல்காரன் சங்கர் நாயக்கிற்கு தனது வங்கி கணக்கில் இருந்து பெரும் தொகையை நீது அகர்வால் அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, நீது அகர்வாலின் வங்கி கணக்குகளை போலீசார் முடக்கினர். மஸ்தான் வலி கைது செய்யப்பட்டதை அறிந்ததும் நீது அகர்வால் தலைமறைவான நிலையில், இன்று அவர் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக திருப்பதி அருகே சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்த முயன்றதாக சமீபத்தில் தமிழகத்தை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் 20 பேரை அம்மாநில போலீசார் சுட்டுக்கொன்றனர். இதைத்தொடர்ந்து செம்மர கடத்தலை தடுக்க அந்த மாநில போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். செம்மரங்களை வெட்டும் கூலித்தொழிலாளர்கள் பலரை கைது செய்து உள்ளனர். அவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் செம்மர கடத்தலில் தொடர்புடைய முக்கிய நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top