துலாம்

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)
இந்த மன்மத ஆண்டில் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு சாதனைகளைச் செய்வீர்கள். உங்களின் செயல்களை ஆர்வத்துடனும் சுறுசுறுப்புடனும் செய்து முடிப்பீர்கள். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களிடம் சகஜமாகப் பழகுவீர்கள். குடும்பத்தின் மேன்மையில் கூடுதல் அக்கறை செலுத்துவீர்கள். விரும்பிய ஊர்களுக்கும் சென்று பணியாற்றுவீர்கள். அரசாங்கத்திலிருந்து எதிர்பாராத சலுகைகள் தேடிவரும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் கூடும். சமூகத்தில் அந்தஸ்தான பதவிகளும் கிடைக்கும். நண்பர்கள் உங்கள் செயல்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். கடந்த காலத்தில் கை நழுவிப்போன வாய்ப்புகள் மறுபடியும் உங்களைத் தேடிவரும். வருமானம் படிப்படியாக உயர்ந்து சிறப்பான நிலையை எட்டிவிடும். தயங்கி தயங்கிச் செய்த காரியங்களில் தெளிவுகள் கிடைக்கும். சிறப்பான சூழ்நிலைகளில் பணியாற்றும் பாக்கியமும் உண்டாகும். பெரியோர்கள், உடன்பிறந்தோர்களின் ஆதரவு, நட்பு கிடைத்து உங்கள் நிலை உயரும்.
வெளியூர், வெளிநாட்டுக்கு அடிக்கடி பயணப்படுவீர்கள். போட்டியாளர்களால் எந்தத் தொந்தரவும் ஏற்படாது. புதிய வண்டி, வாகனங்களை வாங்குவீர்கள். உடலாரோக்கியம் சிறிது பாதிக்கப்படும். வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகளும் வாயுத்தொந்தரவுகளும் ஏற்படலாம். அதனால் சரியான நேரத்தில் உணவை எடுத்துக் கொள்ளவும். மேலும் பெற்றோர் நலனில் அக்கறை எடுக்க வேண்டியிருக்கும். மருத்துவச் செலவுகளும் ஏற்பட வாய்ப்புண்டு. எதிர்பாராத இழப்புகளை ஈடுசெய்ய புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள். சோம்பேறித் தனத்திற்கு விடைகொடுத்துவிட்டு உற்சாகத்துடன் பணியாற்றுவீர்கள். பிற்போக்கான நிலையை முறியடித்து வெற்றிப் பாதையில் பயணிப்பீர்கள். மற்றபடி உங்களின் கடமைகளைச் சரியாகச் செய்து முடிக்கும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் சுமை அதிகரித்தாலும் உங்களின் செயல்களைச் செய்வனே செய்து முடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். சக ஊழியர்களும் உங்களுக்கு நேசக் கரம் நீட்டுவார்கள். பயணங்களால் அனுகூலமான திருப்பங்கள் ஏற்படாது. அலுவலகத்தில் உங்கள் கௌரவத்திற்கு எந்த குறைவும் வராது. மேலதிகாரிகளை அரவணைத்துச் செல்லவும். வியாபாரிகள் பொறுமையுடன் நடந்து கொண்டு வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். இருப்பினும் மறதி காரணமாக வரவு செலவுகளில் குறைவுகள் ஏற்படும். மேலும் கூட்டாளிகளுடன் மனத்தாங்கல்கள் உண்டாகலாம். எனவே அனைத்து விஷயங்களிலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செயல்படவும். புதிய முதலீடுகளில் எச்சரிக்கைத் தேவை. விவசாயிகள் விளைபொருள்களால் லாபமடைவார்கள். நீர்பாசன வசதிகளைப் பெருக்க எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். புதிய குத்தகைகளை அவசரப்பட்டு எடுக்க வேண்டாம். மேலும் வயல் வரப்புச் சண்டைகளில் ஈடுபடவேண்டாம். மற்றபடி தன்னலம் பாராட்டாமல் அடுத்தவர் வளம்பெற பாடுபடுவீர்கள். விவசாயிகள் மத்தியில் உங்கள் நிலை உயரக் காண்பீர்கள்.
அரசியல்வாதிகளின் கனவுகள் நனவாகும். உங்கள் செயல்களுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்தான பதவிகள் கிடைத்துச் செயலாற்றுவீர்கள். பெயரும் புகழும் கூடும். தொண்டர்கள் நல்ல ஒத்துழைப்பை நல்குவார்கள். கலைத்துறையினர் விழிப்புடன் இருந்து ஒப்பந்தங்களை நிறைவேற்ற வேண்டும். சக கலைஞர்களின் அலட்சியப்போக்கை பக்குவமாக கவனிக்க வேண்டிவரும். மற்றபடி செய்யும் தொழிலில் சீரான வளர்ச்சியை காண்பீர்கள். ரசிகர்களிடம் வெளிப்படையாகப் பேசவேண்டாம். பெண்மணிகள் மன நிம்மதியைப் பெறுவார்கள். தர்மகாரியங்களிலும் தெய்வ வழிபாட்டிலும் ஈடுபடுவார்கள். புதிய சொத்து வாங்குவதற்கான ஆரம்பகட்ட வேலைகளைத் துவக்குவீர்கள். குடும்பத்தினருடன் உல்லாசப் பயணங்களை மேற்கொள்வீர்கள். அனைவரையும் அனுசரித்துச் சென்று நல்ல பெயரெடுப்பீர்கள். மாணவமணிகளுக்கு கல்வியில் ஆர்வம் கூடும். ஆசிரியர்களும் பெற்றோர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உள்ளரங்கு விளையாட்டுகளிலும் வெற்றி பெறுவீர்கள். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் இருந்து சரிவுகளைத் தகர்ப்பீர்கள்.
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியையும் குரு பகவானையும் வழிபட்டு வரவும்.

புத்தாண்டு பலன்கள் சகல ராசிக்கும் இங்கே கிளிக் பண்ணுங்க 

Post a Comment

 
Top