அங்கித் கேஷ்ரி குடும்பத்திற்கு இந்திய கிரிகெட் வாரியம் தனக்கு வழங்கும் ஒரு ஆண்டு ஓய்வூதியத்தை கொடுக்க போவதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி அறிவித்துள்ளார்.

கிளப் போட்டியின்போது எதிரணி பேட்ஸ்மேன் அடித்த உயரமான கேட்ச்சை பிடிக்க முயன்றபோது மோதி விழுந்ததில், மேற்கு வங்கத்தை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான அங்கித் கேஷ்ரி மரணம் அடைந்தார். கிரிக்கெட் விபத்தில் பலியான அங்கித் கேஷ்ரி, 19 வயதுக்குட்பட்டோருக்கான மேற்கு வங்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆவார். அங்கித் கேஷ்ரியின் மரணத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, விளையாட்டு வீரர்கள் சச்சின் மற்றும் பலர் இரங்கல் தெரிவித்துள்ளானர்.

இது பற்றி கங்குலி கூறுகையில் ”அங்கித் கேஷ்ரி குடும்பத்திற்கு என்னுடைய இந்த ஆண்டு ஓய்வூதியத்தை கொடுக்க முடிவு செய்துள்ளேன். ஒரு ஆண்டுக்கு பிறகு கிடைக்கும் ஓய்வூதியத்தை பெங்கால் கிரிக்கெட் வாரியத்தில் பதிவு செய்திருக்கும் வீரர்களின் காயம் தொடர்பான சிகிச்சைக்கு கொடுக்க உள்ளேன்” என தெரிவித்துள்ளார். கங்குலிக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ 4 லட்சத்தி 20 ஆயிரம் ஓய்வூதியமாக கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

அங்கித் கேஷ்ரிக்கு மரணத்தை பரிசளித்த அந்த கிளப் போட்டியில் 12வது ஆட்டக்காரராக களமிறங்கி, மற்றொரு வீரருக்கு பதிலாக பீல்டிங் செய்யும்போதுதான் விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top