பிரான்ஸ் குடிமகனிற்கு மரண தண்டனையை நிறைவேற்றினால், இந்தோனேஷியா கடும் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என பிரான்ஸ் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரான்ஸ் குடிமகனான Serge Atlaoui என்பவரை போதை பொருள் கடத்தியதாக குற்றம்சாட்டி கடந்த 2008ம் ஆண்டு இந்தோனேஷியா அரசு கைது செய்து மரண தண்டனை வழங்கியது.

சமீபத்தில் பிரான்ஸ் குடிமகன் உள்பட 10 கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற இந்தோனேஷிய அரசு தயார் நிலையில் உள்ளதாக செய்திகள் வெளியாகின.

இதனைதொடர்ந்து, தனது நாட்டு குடிமகனை மீட்க அனைத்து வகையான நடவடிக்கையும் எடுக்கப்படும் என பிரான்ஸ் ஜனாதிபதி பிராங்கோயிஸ் ஹாலண்டே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று(25.04.15) Azerbaijan நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள அவர், அங்குள்ள Baku நகரில் செய்தியாளர்களிடம் மரண தண்டனை குறித்து பிரான்ஸின் நிலைப்பாட்டினை தெரிவித்துள்ளார்.

அப்போது, பிரான்ஸ் குடிமகனுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவது தங்களால் ஏற்க இயலாது என்றும், தண்டனையை நிறைவேற்றினால் பிரான்ஸ் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் மூலம் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதன் முதல் கட்டமாக, இந்தோனேசியாவிற்குரிய பிரான்ஸ் தூதரக அதிகாரியை திரும்ப அழைத்துக்கொள்வதுடன், இந்தோனேசியாவிற்கு தான் செல்வதை தற்காலிகமாக நிறுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பகிரங்கமான எச்சரிக்கையால், ஐரோப்பிய நாடுகளிலிருந்து இந்தோனேஷியாவிற்கு மரண தண்டனையை ரத்து செய்ய கூடுதல் அழுத்தம் தரப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன.

Post a Comment

 
Top