சென்னை, ஏப். 26–
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று இரவு சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் பஞ்சாப் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் வீழ்த்தியது.
முதலில் விளையாடிய சென்னை அணி 3 விக்கெட்டுக்கு 192 ரன் குவித்தது. மெக்கல்லம் 66 ரன், தோனி 41 ரன், ரெய்னா 29 ரன் எடுத்தனர்.
இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணி சென்னை அணியின் அபாரமான பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் திணறியது. அந்த அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 95 ரன்னே எடுத்தது. இதனால் சென்னை 97 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சென்னை 6 ஆட்டத்தில் 5 வெற்றியுடன் 10 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. வெற்றி குறித்து கேப்டன் தோனி கூறியதாவது:–
பந்து வீச்சாளர்கள் செயல்பாடு சிறப்பாக இருந்தது. குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் பணி நன்றாக இருந்தது.
ஆசிஷ் நெக்ரா அற்புதமான வீரர். அவர் அனுபவமிக்கவர். பந்தை சுவிங் செய்ய முடியாவிட்டாலும் கூட சரியான திசையில் வீசி விக்கெட்டுகளை கைப்பற்றுவார். மொகித்சர்மா, ஈஸ்வர் பாண்டே ஆகியோரும் தங்களது பணியை சரியாக செய்தனர்.
தொடக்க வீரர்கள் (சுமித், மெக்கல்லம்) இருவரும் பயம் இல்லாமல் விளையாடுகிறார்கள். அதே நேரத்தில் கணித்தும் விளையாடுகிறார்கள். இதனால் தான் மற்ற அணிகளின் தொடக்க வீரர்களை விட எங்களது தொடக்கம் நன்றாக இருக்கிறது என்றார்.
பஞ்சாப் அணி கேப்டன் ஜார்ஜ் பெய்லி கூறியதாவது:–
சென்னை அணி மூன்று துறையிலும் திறமையை வெளிப்படுத்தினர். கேட்ச்சுகளை தவறிவிட்டு எங்களுக்கு நாங்களே தவறு இழைத்துவிட்டோம். பேட்டிங்கில் உத்வேகத்தை காண்பது அவசியம். சீனியர் வீரர்கள் களத்தில் நிலைத்து நிற்க வேண்டும் என்றார்.
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.